ஆம்பூர்,ஜூலை.16- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உணவு தேடி ஊருக்குள் வந்த ஒற்றை யானை கீழ் முருங்கை ஊராட்சி அருகில் வனத்தை ஓட்டி வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் தஞ்சம் அடைந்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ்,வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு யானையை விரட்ட உத்தரவிட்டனர்.
இதன் பேரில் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன், ஏ.சி.எப் ராதா கிருஷ்ணன், ஆம்பூர் வனசரக அலுவலர் பாபு ஆகியோர் தலைமையில் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வன வேட்டை தடுப்பு காவலர்கள் 7 பேர் உட்பட 50 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் யானையை பட்டாசு வெடித்து காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரம் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டும் யானை அதே பகுதியில் தஞ்சம் அடைந்து வருவதால் விரட்டும் பணியை கைவிட்டு தொடர்ந்து யானை தேசிய நெடுஞ்சாலைக்கு வராமல் இருக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உணவு கிடைக்காமல் பரிதவிக்கும் வயதான பார்வையற்ற ஒற்றைக் கொம்பன் யானையை மீட்டு வனத்துறையினர் பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் மற்றும் வன ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.