நித்திரவிளை , நவ- 14
குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் அருகே இரையுமன்துறை மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகளுக்கு பாறாங்கற்கள் கடற்கரை ஒட்டி போடப்பட்டுள்ள சாலை வழியாக கொண்டு செல்லப்படுகின்றன. இந்த சாலை கரடு முரடாக இருப்பதால் லாரிகள் வரும்போது அதி பயங்கரமான சத்தம் கேட்டு குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
எனவே சாலையை சரிவர சீரமைப்பு செய்த பிறகு லாரியில் பாறாங்கல் கொண்டு சென்றால் போதும் என பூத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அரையன் தோப்பு பகுதியில் சாலையை அடைத்தனர். இதனால் பாறாங்கல் ஏற்றி கொண்டு வந்த லாரிகள் சாலையோரம் செல் முடியாத நிலை ஏற்பட்டு, ஒதுக்கி விடப்பட்டுள்ளன.
இதனால் மூன்று நாட்களாக கடலரிப்பு தடுப்பு சுவர் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பந்தப்பட்ட துறையினர் கடந்த இரண்டு தினங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த விதமான முடிவும் ஏற்படவில்லை. எனவே தடுப்பு சுவர் பணியை துவங்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.