மயிலாடுதுறையில் காவல்துறையினருக்கு பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்குவதற்கான நடவடிக்கையில் மாவட்ட காவல்துறை ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் மயிலாடுதுறை காவல் உபகோட்ட எல்லைக்கு உட்பட்ட மயிலாடுதுறை, செம்பனார்கோயில், பெரம்பூர், குத்தாலம், பாலையூர், மணல்மேடு, பாகசாலை மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியை மயிலாடுதுறையில் 40 ஆண்டுகளாக இலவசமாக யோகா பயிற்சி அளித்து வரும் பதஞ்சலி யோகா பயிற்சி மையத்தின் குரு டி.எஸ்ஆர்.கணேசன் போலீசாருக்கு பயிற்சி அளித்தார். இதில் தியானம், மூச்சுப் பயிற்சி, சூரிய நமஸ்காரம் ஆகிய பயிற்சிகளும், சர்வங்காசனம் உள்ளிட்ட யோகா பயிற்சிகளும் வழங்கப்பட்டன. வார இறுதி நாளான சனிக்கிழமையில் வழங்கப்படும் இந்த பயிற்சி தங்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதாக போலீசார் தெரிவித்தனர்.



