நாகர்கோவில் ஆக 20
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் ரவுடிகளின் அட்டகாசம் பெருகி வந்த நிலையில், போலீசார் ரவுடிகளை கைது செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அந்தவகையில், குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதுடன், போலீசாரின் கண்ணிலும் மண்ணை தூவி தப்பி வந்த ரவுடிகள், சமீப காலமாகவே ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
சில நாட்களுக்கு முன்புகூட, ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார். தாழாக்குடி பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சிதம்பர பாண்டியை கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில், சுசீந்திரம் அருகே கரும்பாட்டூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்ற பிரபல ரவுடியும் நேற்று போலீசார் இப்படியில் சிக்கியிருக்கிறார். செல்வம் மீது ஏற்கனவே 6 கொலை வழக்குகள் உள்ளன. இதைத்தவிர, கஞ்சா, கடத்தல், மிரட்டல் என கிட்டத்தட்டட 28 கேஸ் நிலுவையில் உள்ளதாக தகவல். இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் நடந்த நிலையில், பல்வேறு வழக்குகளில் செல்வம் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார். அத்துடன் தலைமறைவாகவும் வாழ்ந்து வந்துள்ளார்.
எனவே, இவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, போலீசார் செல்வத்தை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் சுசீந்திரம் பைபாஸ் அருகே, செல்வம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் பைபாஸ் சாலைக்கு விரைந்து சென்ற போலீசார், ரவுடி செல்வத்தை மடக்கிப் பிடித்தனர்.ஆனால், செல்வம் திடீரென அரிவாளை எடுத்து, அஞ்சுகிராமம் எஸ்.ஐ. லிபி பால்ராஜ் என்பவரை வெட்டி விட்டு தப்பமுயன்றார். அப்போது, தற்காப்பு நடவடிக்கைக்காக காவல் ஆய்வாளர் ஆதாம் அலி, செல்வத்தின் காலில் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தார்.
காயமடைந்த செல்வம் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். இதையடுத்து, அரிவாளால் வெட்டப்பட்ட சப் இன்ஸ்பெக்டர், துப்பாக்கியால் சுடப்பட்ட ரவுடி செல்வம் இருவரையும் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இருவருக்குமே தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.
இத்தனை காலமும் தென் மாவட்டத்தையே, குற்ற செயல்களால் நடுங்க வைத்து கொண்டிருந்த பிரபல ரவுடியை, போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.