அரியலூர், ஜூன்:26
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் திங்கள் கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 479 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
முன்னதாக சமூக பாதுகாப்புத் திட்டம் சார்பில், அரியலூர் வட்டம், வெற்றியூர் கிராமத்தை சேர்ந்த மகாலெட்சுமி, கரையவெட்டி கிராமத்தை சேர்ந்த திவ்யபிரியா மற்றும் செந்துறை வட்டம், வஞ்சினபுரம் கிராமத்தை சேர்ந்த ரீத்திஸ் ஆகியோர் நீரில் மூழ்கி இறந்ததை தொடர்ந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1,00,000-க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் நீரில் மூழ்கி இறந்த மகாலெட்சுமி என்பவரின் தாயார் ராஜகாந்தி, திவ்யபிரியா என்பவரின் தாயார் செந்தாமரைச்செல்வி, ரித்தீஸ் என்பவரின் தாயார் ராஜேஸ்வரி ஆகியோர்களிடம் வழங்கினார்.
தொடர்ந்து, கோயம்புத்தூர், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் அன்னிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மாணவன் தமிழ்செல்வம் மற்றும் நான்காம் ஆண்டு பயிலும் ஆண்டிமடம் வட்டம், குவாகம் கிராமத்தைச் சேர்ந்த மாணவன் ரவீந்திரன் ஆகியோருக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.50,000-க்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.