அரியலூர், நவ;26
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 371 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
முன்னதாக, 2023-2024 ஆம் ஆண்டிற்கான தேசிய நுகர்வோர் பாதுகாப்புத் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமை தினவிழா ஆகிய இரு விழாவையும் ஒருங்கிணைந்து நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் -2019ன் சிறப்பம்சங்கள், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம்- 2006, பேக்கிங் மற்றும் லேபிளிங் சட்ட விதி மீறல்கள் கண்டறிதல், உணவுப் பொருள் வீணாவதை தடுத்தல் அல்லது தவிர்த்தல், தவறான விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து நுகர்வோர்கள் விழித்துக்கொள்ளல் மற்றும் இந்திய தர அமைவனத்தின் ISO முத்திரைகள் குறித்தும் மற்றும் ISI முத்திரைகள் உடன் கூடிய பொருட்களான helmet, pressure cooker போன்ற பொருட்களை நுகர்தல் போன்ற தலைப்புகளை மையமாக கொண்டு ஒவியம் வரைதல் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி ஆகியவற்றில், முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கும் பரிசுத்தொகை மற்றும் நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
பின்னர், பணிபுரிந்த காலத்தில் மறைந்த பணியாளரின் வாரிசுதாரருக்கு சத்துணவு அமைப்பாளர் பணிக்கான நியமன ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, சமூக நல அலுவலகத்தின் சார்பில் “பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின்கீழ் பெண் குழந்தைகளை பெற்றெடுத்த அன்னையர்களை கௌரவிக்கும் விதமாக சான்றிதழ், கேடயங்கள் மற்றும் மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்



