அருமனை, ஜன- 25
கடையால் பேரூராட்சியில் ஆறு காணி, பத்துகாணி போன்ற பகுதிகளில் ஏராளமான பன்றி பண்ணைகள் செயல்பட்டு வந்தன. இந்த பண்ணைகளுக்கு கேரளாவில் இருந்து உணவு மற்றும் இறைச்சி கழிவுகள் கொண்டுவரப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இந்த பண்ணைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதனால் பல பன்றி பண்ணைகள் மூடப்பட்டன.
ஆனால் ஆலஞ்சோலை பகுதியில் உள்ள ஒரு பெரிய பன்றி பண்ணை செயல்பட்டு வந்தது. இதையும் அகற்ற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அத்துடன் நேற்று முன்தினம் போலீஸ் பாதுகாப்புடன் பன்றி பண்ணையை அகற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். உரிமையாளர் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தினார். இதனால் அந்த பகுதியில் மக்கள் நிம்மதி அடைந்தனர்.