தருமபுரி மாவட்டம்,செட்டி கரையில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் நேரு யுவகேந்திரா இளைஞர் மைய புதிய மாவட்ட அலுவலக கட்டிட திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் கலந்து கொண்டு அவர் கூறியதாவது. பொதுமக்களுக்கு தேவையான பல நல்ல செயல்களை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யத் தூண்டும் இயக்கம் நேரு யுவகேந்திரா இயக்கம். தருமபுரி மாவட்ட நேரு யுவகேந்திரா இயக்கத்தில் சுமார் 6,000 க்கும் மேலான இளைஞர்கள் உள்ளனர். இந்த இளைஞர்களைக் கொண்டு தருமபுரி மாவட்டத்தை பசுமையான மாவட்டமாக மாற்றுவோம். அதற்கான உங்களின் முழு ஒத்துழைப்பு மாவட்ட நிர்வாகத்திற்கு தேவை. உங்கள் திட்டத்தின் சேவை மற்றும் வடிவங்கள் என்னென்ன, அதற்குத் தேவையான பயிற்சி என்னென்ன என்பது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அவ்வப்போது பயிற்சி வழங்கப்படும் என்றார். பின்னர் நேரு யுவகேந்திரா இளைஞர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை ஆட்சியர் வழங்கினார். நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி ,டி ஆர் ஓ கவிதா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில நேரு யுவகேந்திரா இயக்குனர் செந்தில்குமார், தருமபுரி நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் டி ராவீன் சார்லஸ்டன், அலுவலர் அப்துல் காதர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.



