ஈரோடு ஜன 12
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 237 வாக்குச்சாவடி மையங்களில் வருகின்ற 5 ந் தேதி அன்று நடைபெறவுள்ளது. இந்த வாக்குப்பதிவிற்கு 480 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது. அதனை முன்னிட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்க்கும் பணி பெங்களூரு பெல் நிறுவனத்தின் மூலம் கடந்த 6 ந் தேதி முதல் ஈரோடு மாவட்ட மின்னணு வாக்கு பதிவு இயந்திர கிடங்கில் நடைபெற்று வருகிறது. இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சரிபார்ப்பு பணி முடிவுற்ற பின், இந்திய தேர்தல் ஆணையம் 5 சதவீதம் மாதிரி வாக்குப்பதிவு நடத்திட உத்தரவிட்டுள்ளது. இப்பணி நேற்றுடன் முடிவடைவதை தொடர்ந்து நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.
மேலும் மாதிரி வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் 19 இயந்திரங்கள் பயிற்சி நடத்துவதற்காக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மனிஷிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இந்த ஆய்வின்போது ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் ரவி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா வட்டாட்சியர் (தேர்தல்) சிவசங்கர் உட்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.