தின தமிழ் சிறப்புப் பார்வை
பெருந்தலைவர் காமராசர் ஆட்சி காலத்தில் உள்ளாட்சி மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக திறம்பட பணிசெய்து பெயர் பெற்ற குமரிமாவட்டம் தந்த அன்னை லூர்தம்மாள் சைமன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கவும் முழுஉருவச் சிலை அமைக்கவும் அவர்களின் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாடவும் நெய்தல் மக்கள் இயக்கம் நீண்ட காலமாக கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கிறது.
இது தொடர்பாக நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின் நமது செய்தியாளரிடம் அளித்த பேட்டியில்…
லூர்தம்மாள் சைமன் பிறந்த நாளான செப்டம்பர் 26-ம் நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று அவர்கள் பிறந்து நூற்றாண்டு நிறைவடைந்த 2012- ம் ஆண்டுமுதல் கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கிறோம். அதற்கு இப்போதுதான் ஒரு விடிவு காலம் பிறந்திருக்கிறது என்று எண்ணி மகிழ்ச்சியடைகிறோம்.
தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை எங்கள் கோரிக்கையை ஏற்று லூர்தம்மாள் சைமன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பையும் அவர்கள் மந்திரியாக பொறுப்பேற்ற புகைப்படங்களையும் அனுப்பிவைக்குமாறு கேட்டார்கள். நாங்களும் மிக விரைவாக அவர்களின் வாழ்க்கைக் குறிப்பையும் மந்திரியாக பொறுப்பேற்றபோது கையெழுத்திட்டது, அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் குழுபோட்டோ, அரசு திட்டங்களை பார்வையிட்டது, பல திட்டங்களில் அவர்கள் பெயரில் இருந்த கல்வெட்டுகள் என்று பல மறைக்கப்பட்ட அரிய புகைப்படங்களைத் தேடிக் கண்டுபிடித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து கருத்துரு பெற்று செய்தி மக்கள் தொடர்புத் துறைக்கு அனுப்பிவைத்தோம்.
பெருந்தலைவர் காமராசர் ஆட்சியில் அமைச்சராக இருந்த அனைவருக்கும் உரிய அங்கீகாரமும் கௌரவமும் கிடைக்கப்பெற்ற நிலையில் முதல் பெண் அமைச்சரான லூர்தம்மாள் சைமன் அவர்கள் மூன்று தலைமுறைகளாகப் புறக்கணிக்கப் பட்டு வருவது இந்த ஆட்சியில் சரிசெய்யப்படும் என்று நம்புகிறோம்.
அவர்களின் பிறந்த நாள் அரசுவிழாவாக அறிவிக்கபடும் என்ற செய்தியை செய்தி மக்கள் தொடர்புத் துறையிலிருந்து விரைவாக எதிர்பார்க்கிறோம்.
அதுபோன்று அவர்கள் பெயரில் மணிமண்டபம் அமைக்கவும் முழுஉருவச் சிலை அமைக்கவும் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்தார்



