கன்னியாகுமரி, ஜன. 12 –
பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.
இதற்காக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்ச்சியாக படகுகளை இயக்கி வருகிறது. இந்த நிலையில் வருகிற 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 3 நாட்கள் பொங்கல் பண்டிகை கால விடுமுறை வருகிறது.
இந்த தொடர் விடுமுறை காலங்களில் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். அவர்கள் படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம். 133 அடி உயர திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலத்தை காண ஆர்வம் காட்டுவார்கள். இதனை கருத்தில் கொண்டு வருகிற 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை 3 நாட்கள் படகு போக்குவரத்து 3 மணி நேரம் நீட்டிக்கப்படுவதாக பூம்புகார் படகு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
அதன்படி காலை 8 மணிக்கு தொடங்கப்படும் படகு போக்குவரத்து 2 மணி நேரத்துக்கு முன்னதாக அதிகாலை 6 மணிக்கும் மாலை 4 மணிக்கு நிறுத்தப்படும் சேவை 5 மணி வரையிலும் நீட்டிக்கப்படுகிறது.


