கன்னியாகுமரி, நவ. 14 –
கன்னியாகுமரி கடற்கரை சாலையில் காந்தி மண்டபம் முதல் காட்சி கோபுரம் வரை சாலையின் இருபுறமும் நடைபாதை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் சாலை ஓரங்களில் உள்ள நடை பாதைகளில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். எனவே கன்னியாகுமரி கடற்கரை சாலையில் உள்ள நடைபாதைகளில் அமைந்துள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி நகராட்சி ஆணையர் கண்மணி உத்தரவின்பேரில் நகராட்சி நகர அமைப்பு ஆய்வாளர் அபதுல்காதர், பொறியாளர் பழனி, சுகாதார ஆய்வாளர் அந்தோணி, சுகாதார மேற்பார்வையாளர்கள் பிரதீஷ், மது ஆகியோர் முன்னிலையில் நேற்று கன்னியாகுமரி கடற்கரை சாலையில் காந்தி மண்டபம் மற்றும் காமராஜர் மணிமண்டம் , காட்சி கோபுரம் ஆகிய இடங்களில் உள்ள நடைபாதைகளில் இருந்த 150-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
அதனைத்தொடர்ந்து இன்றும் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் காட்சி கோபுரம் முதல் சிலுவைநகர் வரை உள்ள நடைபாதைகளில் இருந்த 80 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஈடுபட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள்
வைத்தால் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெறும் என நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



