நாகர்கோவில், டிச. 8 –
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் ரூ.17.60 கோடி மதிப்பில் 40 புதிய மகளிர் விடியல் பேருந்துகளை இயக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தலைமையில், அமைச்சர் மனோ தங்கராஜ் வடசேரி பேருந்துநிலையத்தில் கொடியசைத்து துவக்கிவைத்து தெரிவிக்கையில்: திராவிட மாடல் அரசு என்பது முழுக்க முழுக்க மக்களுக்கான அரசு. தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திலி) லிட்., நாகர்கோவில் மண்டலத்தில் பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு 438 நகர பேருந்துகளும் 298 புறநகர் பேருந்துகளும் என மொத்தம் 736 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்துகளில் நாளொன்றுக்கு சுமார் 10.30 இலட்சம் மக்கள் பயணம் செய்து வருகின்றனர். நாகர்கோவில் மண்டலத்தில் இயக்கப்படும் 438 நகர பேருந்துகளில் 366 நகர பேருந்துகள் ”மகளிர் விடியல் பயண பேருந்துகளாக” இயக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவில் மண்டல பேருந்துகளில் நாளொன்றுக்கு சுமார் 3.59 லட்சம் மகளிர் கட்டணமில்லாமல் தினந்தோறும் மகிழ்ச்சியுடன் பயணம் செய்கின்றனர்.
மேலும் பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் முள்ளுர்துறை – தேங்காய்பட்டணம் துறைமுகம், நாகர்கோவில் – குளச்சல், நாகர்கோவில் – இராஜாக்கமங்கலம் துறை, நாகர்கோவில் – ஈத்தாமொழி, நாகர்கோவில் – பிள்ளைதோப்பு, நாகர்கோவில் – தேங்காய்பட்டணம், நாகர்கோவில் – கன்னியாகுமரி ஆகிய 7 வழித்தடங்களில் பேரூந்துகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் தஎன்.சுரேஷ்ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), ராஜேஷ் குமார் (கிள்ளியூர்), முனைவர் தாரகை கத்பர்ட் (விளவங்கோடு), நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) மேலாண்மை இயக்குநர் செ.நடராஜன், நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் பா.பாலசுப்பிரமணியன், போக்குவரத்து அலுவலர்கள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



