நல்லூர், ஜனவரி 3 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் பயிரிடப்படும் முக்கிய பழப் பயிர்களில் ஒன்றாக வாழை திகழ்கிறது. வாழையில் அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான மாதங்களில் சிகாடோகா இலைப்புள்ளி நோயின் தாக்குதல் அதிக அளவில் காணப்படும். இந்நோய் தாக்கிய இலையின் மேற்பகுதியில் வெளிறிய மஞ்சள் அல்லது பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் புள்ளிகள் தோன்றி அவை விரைந்து நீள் வட்டத்தில் பழுப்பு நிறமடைகின்றன. பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலை முழுவதும் பரவுகிறது.
பின்னர் இலை காய்ந்து சருகாகின்றது. இதனால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு வளர்ச்சி தடைபடுகிறது. அதிகம் பாதிக்கப்பட்ட மரத்தில் குலை சிறுத்தும், காய்கள் முதிர்ச்சி அடையாமல் பிஞ்சிலேயே பழுத்தும் விடுகின்றன. இந்த நோயை பரப்பும் பூஞ்சாணம் மழை, பனித்துளிகள் மற்றும் காற்று மூலமாக விரைவில் பரவுகிறது. நெருக்கமான நடவு, மண்ணில் அதிக களைகள், வடிகால் வசதி இல்லாத மண், பனி மற்றும் மழைக்காலங்கள் போன்ற சூழ்நிலைகளில் இந்நோயை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட இலைகளை வெட்டி அகற்றி தீ வைத்து அழிக்க வேண்டும். வாழைத் தோட்டங்களில் நல்ல வடிகால் வசதி செய்ய வேண்டும். களைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். சிபாரிசு செய்யப்பட்ட இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
ஒரு மாத இடைவெளியில் 1 லிட்டர் நீரில் ஒரு கிராம் கார்பன்டாசிம் அல்லது ஒரு கிராம் பினோமில் அல்லது 2 கிராம் மான்கோசெப் அல்லது 2.5கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு தெளித்து கட்டுப்படுத்தலாம். மேலும் ஒரு மருந்தினை தெளிப்பதை தவிர்க்க வேண்டும். புரோபி கோனசோனல் 25 நுஊ 500 மில்லி லிட்டர் எக்டர் மற்றும் மினரல் எண்ணெய் 10 மிலி 1 லிட்டருக்கு கலந்து தெளிக்கவும் மற்றும் திரவம் டீப்பால் நல்லது சோப்பு கரைசல்5 மிலி 10 லிட்டர் மருந்து கடைகளுடன் சேர்க்கவும். மேற்கண்ட மேலாண்மை முறைகளை கடைப்பிடித்து வாழையில் சிகாடோகா இலை புள்ளி நோயை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறலாம். இவ்வாறு கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் க.வ.நக்கீரன் அவர்கள் தெரிவித்தார்.


