நாகர்கோவில் ஆக 20
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புன்னார்குளம் ஆல்டிக் சோப்பு கம்பெனி அருகில் வைத்து 18-ம் தேதி இரவு கரும்பாட்டூர் ஊரை சார்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகன் செல்வம் (எ) செல்வமுருகன் 38 என்பவர் தன்னை கத்தியால் தாக்கி மிரட்டி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் அவர் தேரூர் அருகில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுசீந்திரம் வட்ட காவல் ஆய்வாளர் ஆதம் அலி,அஞ்சுகிராமம் காவல் உதவி ஆய்வாளர் லிபி பால்ராஜ் தலைமையில் போலீசார் குற்றவாளி தலைமறைவாக இருந்த இடத்திற்கு வந்தனர். போலீசார் தன்னை சுற்றி வளைத்திருப்பதை அறிந்த குற்றவாளி தப்பிச்செல்ல முயற்சித்துள்ளார். உடனே உதவி ஆய்வாளர் லிபி பால்ராஜ் அவரை பிடிக்க முயன்ற போது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியதில் உதவி ஆய்வாளருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எனவே
ஆய்வாளர் ஆதம் அலி தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு சரணடையும்படி எச்சரித்தும் கேட்காமல் மீண்டும் சார்பு ஆய்வாளர் லிபி பால்ராஜை வெட்டி விட்டு தப்ப முற்பட்ட போது காவல் ஆய்வாளர் வலது காலில் சுட்டதில் காயம் ஏற்பட்டு குற்றவாளி கீழே விழுந்துள்ளார். உடனடியாக
காயம்பட்ட குற்றவாளி மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோரை காவல் ஆய்வாளர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இருவருக்கும் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட பிரபல ரவுடி செல்வம் தென்தாமரைக்குளம் காவல்
நிலையத்தில் A+ வகை சரித்திர பதிவேடு குற்றவாளியாவார். மேலும் இவர்மீது பல்வேறு
மாவட்டங்களில் 28 குற்றவழக்குகள் உள்ளன. அதில் 06 கொலை வழக்குகளும் 07 கொலை
முயற்சி வழக்குகளும் அடங்கும். மேலும் இவர்மீது பல்வேறு மாவட்டங்களில் 05 நீதிமன்ற
பிடியாணைகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.