கன்னியாகுமரி ஆக 1
கன்னியாகுமரியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீரென நடத்திய சோதனையில் 150 கிலோ கெட்டுப்போன உணவு பொருட்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக விளங்கும் கன்னியாகுமரிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வருகின்றனர்.
கன்னியாகுமரி கடற்கரையில் அதிகாலை உதிக்கும் சூரியனை காண்பதற்காக பல்வேறு சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தருகின்றனர். கன்னியாகுமரி சுற்றுலா தளமாக விளங்குவதால் அப்பகுதியில் சைவம் அசைவம் என அதிகமான ஹோட்டல்கள் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் கன்னியாகுமரியில் செயல்பட்டு வரும் ஹோட்டல்களில் கெட்டுப்போன உணவுகளை பயன்படுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ரகசிய தகவலை அடிப்படையாகக் கொண்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கன்னியாகுமரியில் செயல்பட்டு வரும் உணவகங்களில் திடீரென சோதனை செய்தனர். கன்னியாகுமாரி நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள ஐந்திற்கும் மேற்பட்ட ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை செய்த போது மீன், இறைச்சி, நண்டு போன்றவை சமைத்து பயன்படுத்தாமல் குளிர்சாதன பெட்டியில் வைத்திருப்பது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். கெட்டுப்போன உணவுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஐந்து ஓட்டல்களில் பறிமுதல் செய்யப்பட்ட 150 கிலோ கெட்டுப்போன உணவுகளை அதிகாரிகள் குப்பை தொட்டியில் கொட்டி அழித்தனர். பின்னர் கெட்டுப்போன உணவுகளை பயன்படுத்திய ஐந்து ஹோட்டல்களுக்கு தல ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.15 ஆயிரம் ஆபராதம் விதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கன்னியாகுமரி நெடுஞ்சாலை பகுதிகளில் ஓட்டலில் திடீரென உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கெட்டுப்போன உணவுகளை ஹோட்டல்கள் பயன்படுத்தி வந்ததை அறிந்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.