திண்டுக்கல்லில்
“நான் முதல்வன்“ திட்டத்தின் கீழ் “கல்லுாரிக் கனவு“ என்ற
உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்
செ.சரவணன், தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் “நான் முதல்வன்“ திட்டத்தின் கீழ் “கல்லுாரிக் கனவு“ என்ற உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், தலைமையில் திண்டுக்கல் ஜிடிஎன் கல்லுாரியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர், மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். பள்ளிக் கல்வியை முடித்த மாணவ, மாணவிகளின் உயர்கல்வி படிப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் தமிழ்நாடுஅரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பதில் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் , பள்ளி கல்வியை முடித்த மாணவ, மாணவிகளின் உயர்கல்வியை உறுதி செய்யும் வகையில் நான்முதல்வன் திட்டத்தின் கீழ், உயர் கல்வி வழிகாட்டுதலுக்கான கல்லூரிக் கனவு 2025 நிகழ்ச்சியை தமிழ்நாடு முழுவதும் காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்து, கல்லூரிக் கனவு 2025 உயர்கல்வி வழிகாட்டி புத்தகத்தினை வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் கல்லுாரிக் கனவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கல்லுாரிக் கனவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
பள்ளி மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயிலுவதை உறுதி செய்ய வேண்டும், அவர்களின் எதிர்காலம் சிறப்பானதாக அமைய வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிப் படிப்பை முடித்த ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் ஏதாவது ஒரு சந்தேகம், படிப்பை தேர்வு செய்வதில் குழப்பம், வேலைவாய்ப்புள்ள படிப்புகள், கல்வி உதவித்தொகை தொடர்பான தகவல்கள், மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கலைக்கல்லுாரி தொடர்பான தகவல்கள் ஆகியவற்றை தெரிவித்து தெளிவான விளக்கம் அளித்து மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியாக இது அமைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி படிப்பது மட்டுமின்றி வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கான இலக்கை அடைவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தும் வகையில் இங்கு ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
கல்வி என்பது வாழ்க்கையில் குறிக்கோள், அதில் மதிப்பெண் என்பது குறியீடுதான். மதிப்பெண் குறித்து யாரும் கவலைப்பட வேண்டியது இல்லை. தங்களுக்கு பிடித்த துறையில் உயர்கல்வியை தேர்வு செய்துதான் முக்கியம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மாணவ, மாணவிகளின் உயர்கல்வியை உறுதி செய்வதற்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அங்கன்வாடி முதல் யுபிஎஸ்சி தேர்வு வரை அரசு சார்ந்த நிறுவனங்களில் படிப்பதற்கான வாய்ப்பு தமிழ்நாட்டில் மட்டும் தான் உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிப் படிப்பை முடித்த ஒருவர் கூட விடுபடாமல் அனைவரும் உயர்கல்வி சேர்ந்திட வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகளின் உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், மாணவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த கட்டுப்பாட்டு அறையை 18004250047 அல்லது 7598866000 என்ற எண்ணில் தொடர்புகொண்டு சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம்.
இந்த கல்லுாரிக் கனவு நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் தங்கள் உயர்கல்வியை தேர்ந்தெடுப்பது தொடர்பான சந்தேகங்களை நேரில் நிவர்த்தி செய்துகொள்ளும் வகையில், கல்லுாரிகள், தொழிற்கல்வி பயிற்சி நிலையங்கள் சார்பாகவும், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் தொடர்பான ஆலோசனைகள் பெற சமூக நலத்துறை உள்ளிட்ட பிற துறை அலுவலகங்கள் மூலமாகவும், மாணவர்களுக்கான வங்கிக் கடனுதவிகள் வழங்கிடும் வகையில் வங்கிகள் சார்பிலும் 25க்கும் மேற்பட்ட சிற்றரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மாணவர்களுக்குத் தேவையான சான்றுகளை உடனுக்குடன் பெறும் வண்ணம் இ-சேவை மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
திண்டுக்கல் மாவட்டத்தில் முதற்கட்ட கல்லுாரிக் கனவு நிகழ்ச்சி இன்று நிறைவு பெற்றுள்ளது. இரண்டாம் கட்ட நிகழ்வு நாளை(16.05.2025) பழனி அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லுாரியிலும், மூன்றாம் கட்டமாக நத்தம் அய்யனார்புரம் கள்ளழகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 20.05.2025 அன்றும் நடைபெறவுள்ளது.
மாணவ, மாணவிகள் உங்களுக்கான உயர்கல்வி படிப்பை சரியா தேர்வு செய்திட வேண்டும். படிப்பு, கல்லுாரி, எதிர்கால வேலைவாய்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். கல்விதான் ஒருவருடைய அடையாளம். அது சமூகத்தில் உங்களுக்கு அளிக்கும் அங்கீகாரம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்த அனைத்து மாணவ, மாணவிகளும் உயர்கல்வி சேர வேண்டும் என்ற மாவட்ட நிர்வாகத்தின் கனவு இந்த கல்லுாரிக் கனவு நிகழ்ச்சி வாயிலாக மெய்ப்பட வேண்டும். அதற்காக அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து செயலாற்றிட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ப.உஷா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) மு.கோட்டைக்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் எஸ்.பிரபாவதி, முன்னோடி வங்கி மேலாளர் எஸ்.ஆனந்த் பிரபாகரன், ஜிடிஎன் கலைக்கல்லுாரி முதல்வர் முனைவர் எஸ்.சரவணன், ஜிடிஎன் சட்டக் கல்லுாரி முதல்வர் முனைவர் பி.ஆர்.சீனிவாசன் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.