ஏப்ரல்: 2
திருப்பூர் சாதிக் இணைந்தெழ தமிழ்நாடு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
புனிதம் நிறைந்த ரமலான் மாதத்தில், நோன்பிருந்து, திருக்குர்ஆனை ஓதி, இறையோனை வணங்கி, நல்லறங்களைப் பேணி, ஏழைகளுக்கு ஈந்து, இறையருளைப் பெற்று, ஈதுல் ஃபித்ர் எனும் ஈகைத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட இந்த புனித ரமலான்மாதம், நமக்கு ஒரு மகத்தான பயிற்சிக் களமாக அமைந்து, ஆண்டு முழுவதும் கடமையுணர்வுடனும், ஒழுக்கத்துடனும் வாழும் பண்பை ஊட்டியுள்ளது. இந்நற்பண்புகள் நம் வாழ்நாள் முழுவதும் நிலைத்து நிற்க, எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி வேண்டுவோம்.
“பசித்தோருக்கு உணவளி, நோயாளிகளை நலம் விசாரி, நலிவுற்றோருக்கு உதவி செய், அண்டை வீட்டாரிடம் அன்பு காட்டு” என்று இஸ்லாம் வலியுறுத்தும் சகோதரத்துவத்தை நம் வாழ்வில் உறுதியாகப் பின்பற்றி, அன்பு, கருணை, ஈகை, பரஸ்பர நட்பு, பகிர்ந்து கொள்ளுதல், சமாதானம் ஆகிய நற்குணங்களுடன் அண்டை அயலாரோடு இணைந்து வாழ்வோம். மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் பேணி, இறைத்தூதரின் வழியில் சிறந்து விளங்க இறைவனைப் பிரார்த்திப்போம்.
புத்தாடை உடுத்தி, அறுசுவை உணவுகளை அருந்தி, உற்றார் உறவினருடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து இந்நாளை இனிதே கொண்டாடுவது போல, வாழ்நாள் முழுவதும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.