ஆரல்வாய்மொழி மார்ச் 24
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள் செண்பகராமன்புதூரில் அரசு மருத்துவமனை இருக்கிறது. இந்த பகுதியில் 45 வயதாகும் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை பார்க்கிறார். இவருடைய மனைவி இவாஞ்சலினுக்கு 40 வயது ஆகிறது. இவர் முப்பந்தலில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.
சதீஷ்குமார் தூத்துக்குடியில் வேலை பார்த்து வரும் நிலையில் சனிக்கிழமைகளில் மட்டுமே ஊருக்கு வருவார் என கூறப்படுகிறது. இதன் காரணமாக பேராசிரியை இவாஞ்சலின் அவ்வப்போது, ஆரல்வாய்மொழியில் உள்ள தனது தந்தை வீட்டில் சென்று தங்குவார். அதன்படி அவர் கடந்த வியாழக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு ஆரல்வாய்மொழியில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார்.
பின்னர் நேற்று மாலையில் வீட்டுக்கு வந்தார். முன்பக்க கதவைத் திறந்து உள்ளே சென்ற போது பின்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு ஆடிப்போனார். பின்னர் படுக்கை அறையில் உள்ள பீரோவை சென்று பார்த்த போது அதுவும் திறந்து கிடந்தது. பீரோவில் வைத்திருந்த தங்க கம்மல், மோதிரம் என 19 கிராம் நகைகள் கொள்ளை போயிருந்தது.பின்னர் மற்ற அறைகளுக்கு சென்று பார்த்த போது சமையல் அறையில் இருந்த மிக்சி, கிரைண்டர், கியாஸ் சிலிண்டர், சில்வர் பாத்திரங்கள், துணிமணிகள் மற்றும் முன் அறையில் இருந்த டி.வி. என அனைத்து பொருட்களும் கொள்ளை போய் வெறும் வீடாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர்கள் டெம்போவில் வந்து வீட்டின் பின் வாசல் அருகே உள்ள சாலையில் நிறுத்திவிட்டு, கதவை உடைத்து அனைத்து பொருட்களையும் கொள்ளையடித்து சென்றிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது
இதுகுறித்து தகவல் அறிந்து டிஎஸ்பி லலித்குமார், ஆரல்வாய்மொழி சப்- இன்ஸ்பெக்டர்கள் சதீஷ், சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். நாகர்கோவிலில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகள் பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். சினிமா பாணியில் கன்னியாகுமரி பேராசிரியை வீட்டில் இருந்து அனைத்து பொருட்களையும் திருடர்கள் அள்ளிச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.