திருப்பத்தூர்: மார்ச்:27, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்திற்கு திருப்பத்தூர் கோவிலூர் பகுதியைச் சார்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் சுமார் 50க்கும் மேற்பட்ட விசிக பொறுப்பாளர்களோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
அப்போது மனு குறித்து விசிக பொறுப்பாளர் பழனி கூறுகையில்,
1996 ஆம் வருடம் செப்டம்பர் 18ஆம் தேதி பாச்சல் கிராமம் தில்லை நகர் பகுதியில் அன்றைய தனி வட்டாட்சியர் மூலமாக வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 89 ஆதிதிராவிட இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. அதற்குப் பிறகு 1999 ஆம் வருடம் ஒரு சில நபர்கள் வீடு கட்டி குடியேறிய நபர்களை கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டி பட்டாக்களை பெயர் மாற்றி எழுதி வாங்கிக்கொண்டு அரசுக்கு நிலம் வழங்கிய நில உரிமையாளரிடம் மீண்டும் அந்த பட்டங்களை ஒப்படைத்து அதை வைத்துக்கொண்டு நிலத்தின் உரிமையாளர் இலவசமாக வழங்கிய வீட்டுமனை பட்டாக்களை ஆதிதிராவிட இன மக்கள் விற்று வருகிறார்கள் என பொய்யான தகவலை நீதிமன்றத்தில் கூறி தீர்ப்பினை தங்களுக்கு சாதகமாக பெற்று அதே இடத்தை மீண்டும் வேறு சில நபர்களுக்கு விற்று வருகிறார்கள். இது சம்பந்தமாக திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து மீண்டும் அந்த 89 ஆதிதிராவிட இன மக்களுக்கு அரசால் கொடுக்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாக்களை திரும்ப பெற்றுக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
மேலும் மனு அளிக்கும்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பத்தூர் நகர செயலாளர் ஆனந்தன், ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் (எ)பகலவன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.