நாகர்கோவில் ஜூலை 3
குமரி மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதற்கு பதிலாக சமஸ்கிருதத்தில் பெயர் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து
அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :-
இந்தியாவில் காலகாலமாக இருந்த இந்திய தண்டனைச் சட்டம் அதாவது “இந்தியன் பீனல் கோடு ” குற்றவியல் நடைமுறைச் சட்டம் அதாவது “கிரிமினல் புரோசிஜர் கோடு” இந்திய சாட்சியங்கள் சட்டம் அதாவது “இந்தியன் எவிடன்ஸ் சட்டம்” ஆகியவை நேற்று முதல் மாற்றப்பட்டுள்ளன அவைகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் பதிலாக சமஸ்கிருதத்தில் மாற்றப்பட்டுள்ளது. புதிய மூன்று சட்டங்களின் பெயர்கள் சமஸ்கிருத பெயர்களில் வைக்கப்பட்டுள்ளது. இது வழக்கறிஞர்கள், நீதிபதிகள், சட்டத்துறை ஆசிரியர்கள் ஆகியோர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. அனைத்து சட்டங்களும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பது அரசின் சட்டத்தில் உள்ள நிலையில் சமஸ்கிருதத்தில் தலைப்பு வைப்பதற்கு அதிகாரம் கிடையாது. ஆங்கிலத்தை தவிர்த்து மற்ற மொழிகளில் சட்டங்களின் பெயர் மாற்ற பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை பாராளுமன்றத்திலேயே 146 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்த போது எந்தவித விவாதங்கள் இல்லாமல் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் 56.37 சதவீதம் பொதுமக்களுக்கு சமஸ்கிருதம் மற்றும் இந்தி தெரியாது இந்நிலையில் இந்த மொழியில் புதிய சட்டங்களுக்கு பெயர் வைத்திருப்பது இந்தி மற்றும் சமஸ்கிருத மொழி தெரியாத மக்களின் விருப்பத்திற்கு எதிரானது. மேலும் தமிழகத்தில் நடைமுறை பிரச்சனைகள் உள்ளன.எனவே 3 புதிய சட்டங்களையும் ஆங்கிலத்தில் பெயர் வைக்காமல் சமஸ்கிருதத்தில் வைத்திருப்பது பொது மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு இந்த புதிய சட்டம் தவறிவிட்டது.மேலும் இந்தச் சட்டம் மனித உரிமைக்கு எதிராகவும் உள்ளது. எனவே இந்த புதிய மூன்று சட்டங்களுக்கும் சமஸ்கிருதத்தில் பெயர் வைத்ததை குமரி மாவட்ட அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு எதிர்ப்பு தெரிவிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.