திங்கள் சந்தை, பிப்- 23
காரங்காடு புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணி குறித்து விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் நிகழ்ச்சி நடந்தது. கத்தோலிக்க சங்கம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சிக்கு காரங்காடு கத்தோலிக்க சங்க இயக்குனரும், பள்ளி தாளாளருமான சுஜன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை ரோஸ்லட் முன்னிலை வகித்தார்.
தக்கலை தீயணைப்பு அலுவலர் ஜீவன் ஸ் தலைமையில் நிலைய அலுவலர்கள் தீயணைப்பு ஒத்திகையை செய்து காண்பித்தனர். அப்போது சிலிண்டர் தீப்பிடிக்கும் போது ஈர சாக்குகளை பயன்படுத்தி அணைப்பது, காயம் அடைந்தவர்களை அவசரமாக பெட்ஷீட், லுங்கி, சேவைகளை பயன்படுத்தி ஸ்ட்ரக்சர் உருவாக்கி தூக்கி செல்வது, காயம் பட்டவர்களை மாடியில் இருந்து கயிறு வழியாக இறக்குவது குறித்த செயல்முறை விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து தீ விபத்தை தடுக்க இரண்டு சிலிண்டர்களை அருகருகே வைக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். நிகழ்ச்சியில் கத்தோலிக்க சங்க தலைவர் மரிய உபால்டு, செயலாளர் மரிய சிலுவை மற்றும் ஆசிரியர்கள் உட்பட மாணவர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.