ஈரோடு மார்ச் 1
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
தமிழ்நாட்டில் தற்போது கோடை வெப்ப அலைகளினால் வெப்ப தாக்கம் அதிகமாக உள்ளது. மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். சுற்றுப்புற சூழல் வெப்பநிலை அதிகமாகும் போது அதிகமான வியர்வை வழியாக உப்பு மற்றும் நீர்ச்சத்து அதிகமாக வெளியேறுகிறது.
அதிக வெப்பத்தினால் அதிக தாகம், தலைசுற்றல், கடுமையான தலைவலி, தசைப் பிடிப்பு, உடல் சோர்வடைதல், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். மேலும் பச்சிளம் குழந்தைகள், சிறுவர் சிறுமியர்கள். வயதானவர்கள் கர்ப்பிணிகள் இணை நோய் உள்ளவர்களுக்கு வெப்பத்தாக்க அதிர்ச்சி ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. கோடை வெப்ப தாக்க பாதிப்புகளை தடுக்க காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் நடமாடுவதை தவிர்க்கவும். வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் குடை கொண்டு செல்ல வேண்டும்.
வெப்பத்தினால் ஏற்படும் நீர் இழப்பை தடுக்க தண்ணீர், மோர். அரிசி கஞ்சி. இளநீர், பழச்சாறுகள், ஓ ஆர் எஸ் திரவம் ஆகியவற்றை பருகலாம். மேலும் பருவ கால பழங்களான தர்பூசணி, முலாம்பழம் மற்றும் வெள்ளரி, நுங்கு ஆகியவற்றை உணவாக எடுத்துக் கொள்ளலாம். வீட்டில் சமைத்த உணவுகளை உட்கொள்வது சிறந்தாகும். ஐஸ் வாட்டர் போன்ற மிக குளிர்ந்த பானங்களை தவிர்க்க வேண்டும். வெளிர் நிறமுள்ள தளர்ந்த பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம் உடல் வெப்பத்தை குறைக்கலாம்.
வெப்ப தாக்க அதிர்ச்சி ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சையாக அந்த நபரை குளிர்ந்த காற்றோட்டமான பகுதியில் படுக்க வைத்து குடிப்பதற்கு பழச்சாறு அல்லது ஓ ஆர் எஸ் திரவம் அல்லது தண்ணீரை கொடுக்க வேண்டும். அவர்கள் உடல் வெப்பத்தை குறைப்பதற்கு குளிர்ந்த தண்ணீரால் உடல் முழுவதும் நனைத்து விட வேண்டும். பின்பு 108 அவசர ஊர்திக்கு அழைப்பு விடுத்து உடனடியாக அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்திடல் வேண்டும். கோடை காலத்தில் பரவும் நோய்களான அம்மை, தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி மற்றும் வெயில் கொப்பளங்களுக்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டு மருத்துவரின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மேற்கண்ட கோடை வெயிலின் வெப்ப தாக்க பாதுகாப்பு வழிமுறைகளை கையாண்டு தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .