வேலூர், ஏப்ரல் 30
இன்றைய காலத்தில் அதிகரித்து வரும் நீரிழிவு மற்றும் ப்ரீ டயபடீஸ் நோய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில், வி.ஐ.டி கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ஜி. விஸ்வநாதன், டாக்டர் மோகனின் நீரிழிவு சிறப்பு மருத்துவமனைக்கு வேலூரில் நீரிழிவு தடுப்பு திட்டம் ஒன்றை தொடங்குவதற்கான ஆதரவினை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு, வேலூரில் புதுப்பிக்கப்பட்ட டாக்டர் மோகனின் கிளினிக் திறப்பு விழா நிகழ்வின்போது வெளியிடப்பட்டது. இக்கிளினிக் தற்போது நவீன தொழில்நுட்பத்தால் ஊக்கமளிக்கப்படும் துல்லிய நீரிழிவு பராமரிப்பு சேவைகளை வழங்க உள்ளது. இந்த முன்னேற்றத்தின் மூலம், வேலூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள நோயாளிகளும் உலகத் தரமான நீரிழிவு கண்டறிதல் மற்றும் சிகிச்சை சேவைகளை அனுபவிக்க முடியும் என்பதுடன், உயர் தர மருத்துவ சேவைகளின் அணுகலும் நகர எல்லைகளைத் தாண்டி விரிவடைகின்றது.
ராணிப்பேட்டை, ஆற்காடு, குடியாத்தம், ஆம்பூர், வாலாஜாபேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வருகின்ற நோயாளிகளின் நலனுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் முழுமையான நீரிழிவு ஆலோசனைகள், டயட் ஆலோசனைகள், இன்சுலின் பம்ப் சிகிச்சைகள் என பல பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகள் வழங்கப்பட உள்ளன.
இந்த புதிய மையம், VIT பல்கலைக்கழகத்தின் நிறுவனர்-வேந்தரான டாக்டர் ஜி. விஸ்வநாதன், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ. பி. நந்தகுமார் MLA, மற்றும் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பி. கார்த்திகேயன் MLA ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது. மேலும், டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் தலைவர் டாக்டர் வி. மோகன், டாக்டர் எம். சுதாகர், வேலூர் கிளை மருத்துவர், மூத்த மருத்துவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் தலைவர் டாக்டர் வி. மோகன் கூறியதாவது: “தமிழகத்தில், குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால், சிறப்பு சிகிச்சை மையங்கள் அவசியமாகியுள்ளது. நம் நோயாளிகளின் நம்பிக்கையே இந்த விரிவாக்கத்திற்கு ஊக்கம் தந்தது. இந்த புதிய மையம் மூலம் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய சிறந்த சிகிச்சை அளிக்கமுடியும்.”
முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட டாக்டர் ஜி. விஸ்வநாதன் கூறுகையில்: இன்றைய இளம் தலைமுறையிலேயே நீரிழிவு பாதிப்பு அதிகரித்து வருவதால், ஆரம்ப கட்ட பராமரிப்பு மற்றும் சிறப்பு கவனிப்பு முறைமைகள் உருவாக வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஏழு மாநிலங்களில் உள்ள கிளைகளில், உயர்தர சிகிச்சையை சீராக வழங்கி, டாக்டர் மோகனின் நீரிழிவு சிறப்பு மருத்துவமனை ஒரு சிறந்த முன்னோடியான மாதிரியை உருவாக்கியுள்ளது. கல்வி மற்றும் சுகாதாரம் என்பது ஒரு முன்னேற்றமான சமுதாயத்தின் இரு முக்கிய தூண்கள். உலகின் நீரிழிவு நோயாளிகளில் இந்தியா சுமார் 25% பங்கு வகிக்கிறது. அதனால், அரசு, குறிப்பாக பொருளாதார ரீதியாக பிற்போக்கு மக்களுக்கு உதவ, அரசு மருத்துவமனைகளில் நீரிழிவு சிறப்பு பிரிவுகளை அமைப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். கல்வியை அனைவருக்கும் கொண்டு சென்றதைப் போலவே, சுகாதாரத்திலும் ஒரு தேசிய அளவிலான முயற்சி தேவைப்படுகிறது.”
அதனை தொடர்ந்து, “முன்பெல்லாம் நீரிழிவு செல்வந்தர்களுக்கே வரும் நோயாக கருதப்பட்டது. ஆனால் இன்று, உணவுப் பழக்கவழக்கங்களும் வாழ்க்கை முறைகளும் மாறியதால், அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். விழிப்புணர்வும் செயல்பாடும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது. எனவே, நீரிழிவைத் தவிர்க்க கல்வி மற்றும் விழிப்புணர்வை மையமாகக் கொண்ட ஒரு தடுப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும் என டாக்டர் மோகனை கேட்டுக் கொள்கிறேன். வி.ஐ.டி நிறுவனம் இந்த முயற்சிக்கு முழுமையான ஆதரவை வழங்கும். வேலூரைத் தாண்டியும் இந்தியா முழுவதும் இதன் தாக்கத்தை விரிவுபடுத்த டாக்டர் மோகனின் அணியுடன் நெருக்கமாக பணியாற்ற நாங்கள் உறுதியளிக்கிறோம். இந்த மாற்றத்தை வழிநடத்த, டாக்டர் மோகன் போன்ற அனுபவமிக்க மருத்துவ வல்லுநர் சிறந்தவராக இருப்பார்.”
திரு. ஏ. பி. நந்தகுமார் MLA கூறுகையில்: “கடந்த ஆண்டுகளில், டாக்டர் மோகன் மற்றும் அவருடைய நிபுணர் குழு வேலூர் மக்களின் வாழ்க்கையில் உண்மையாகவே மறக்கமுடியாத மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். நீரிழிவுடன் வாழும் ஆயிரக்கணக்கான மக்களை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ உதவியதோடு, இந்த நோயை எதிர்பார்க்கும் முறையையும் மாறச்செய்துள்ளனர். சரியான பராமரிப்பு மற்றும் மனஉறுதியுடன் நீரிழிவை சிறப்பாகக் கட்டுப்படுத்த முடியுமென்று அவர்கள் நிரூபித்துள்ளனர்.
திரு. பி. கார்த்திகேயன் MLA கூறுகையில்: “நான் கடந்த 20 ஆண்டுகளாக டாக்டர் மோகனின் நீரிழிவு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளியாக, அவர்கள் வழங்கும் அக்கறையோடும் சிறப்பான சிகிச்சையோடும் நான் நேரடியாக அனுபவித்துள்ளேன். இன்று, அவர்கள் வேலூரில் மேலும் பெரியதும் நவீன வசதிகளுடன் கூடிய புதிய மையத்தில் தொடங்குவதற்கு நாம் பெருமிதம் கொள்கிறோம். நீரிழிவு பராமரிப்பில் டாக்டர் மோகன் அவர்கள் காட்டி வரும் விடாமுயற்சி இந்த மருத்துவமனைையின் ஒவ்வொரு அம்சத்திலும் தெளிவாகக் காணப்படுகிறது. அவரது தொலைநோக்கு பார்வை எங்கள் சமூகத்தில் பலரது வாழ்வை மாற்றியுள்ளது. இத்தகைய சிறப்பான நிகழ்வில், தன்னுடைய துறையில் தனி அடையாளமுடைய டாக்டர். ஜி. விஸ்வநாதன் (வி.ஐ.டி.) அவர்களுடன் இணைந்து பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்கு பெரும் மரியாதையாக இருக்கிறது.”
டாக்டர் எம். சுதாகர், மருத்துவர், வேலூர் கிளை கூறுகையில்: “இந்த மையம் வெறும் பரப்பில் மட்டுமல்ல – நவீனமாகவும், ஒவ்வொரு நோயாளியின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் அமைந்துள்ளது. மேம்பட்ட பரிசோதனை வசதிகள், முழுமையான மேலாண்மை அணுகுமுறைகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற மருத்துவ குழுவுடன், நாம் வேலூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நீரிழிவு நோயை கண்டறிந்து, சிகிச்சை செய்து, தடுக்கும் பணியில் மேலும் வலுவடைந்துள்ளோம்.”
இந்தியா முழுவதும் 50-க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் 33 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சேவையை, டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் செய்து வருகிறது.
இந்த புதிய மையத்தில் வழங்கப்படும் சேவைகள்:
· மேம்பட்ட நீரிழிவு ஆலோசனைகள்
· முழுமையான ஆய்வுக்கூட பரிசோதனைகள் (டிஜிட்டல் ரிப்போர்ட் வசதியுடன்)
· கண் மற்றும் கால் பரிசோதனைகள்
· உணவியல் ஆலோசனை
· நீரிழிவு கல்வி
· இன்ஹவுஸ் ஃபார்மசி
· தொடர்ச்சியான கிளுக்கோஸ் கண்காணிப்பு (CGM), இன்சுலின் பம்ப் சிகிச்சை
· நீரிழிவு சிகிச்சையையும் வழங்குகிறது