நாகர்கோவில் மே 1
கன்னியாகுமரி – நாகர்கோவில் டவுன் இடையே 19.26 கி.மீ. தூரத்துக்கு இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இரட்டை ரயில்பாதை பணிகளுக்காக சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் ரூ.1009 கோடி அனுமதிக்கப்பட்டது. இதன் மூலம் இரட்டை ரயில் பாதை பணிகள், வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த இரட்டை ரயில் பாதை பணிகளின் ஒரு அங்கமாக, நாகர்கோவில் டவுண் – இரணியல் இடையிலான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. பார்வதிபுரம் ரயில்வே பாலத்துக்கு கீழ், ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் கூடுதல் தண்டவாளம் அமைக்கும் பணிகள் வேகமாக நடக்கின்றன. இதற்காக பார்வதிபுரம் அருகே உள்ள, கணியாகுளத்தில் செயல்பட்டு வந்த ரயில்வே கேட் மூடப்பட்டுள்ளது.
தண்டவாளம் அமைக்கும் இடத்தில் ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டப்பட்டு அதில் மண், ஜல்லி நிரப்பி அந்த பகுதி சமன் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு சமன் செய்யப்பட்டு உறுதி தன்மை சோதனை முடிந்த இடங்களில், தண்டவாளம் பதிக்கப்பட்டு வருகிறது. தண்டவாளம் பதிக்கப்பட்ட பின் ஜல்லி நிரப்பி, இயந்திரம் மூலம் அவை சமன் செய்யப்படுகின்றன. கணியான்குளம் ரயில்வே கேட் மூடப்பட்டு உள்ளதால், அந்த பகுதி வழியாக சென்ற வாகனங்கள் மாற்று பாதையில் செல்கின்றன. நாகர்கோவில் டவுன் – இரணியல் இடையே வரும் செப்டம்பருக்குள் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.