தருமபுரி நகர மற்றும் புறநகர் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின்
செயல்பாடுகள் குறித்தும், இரவு நேரத்தில் போதுமான வெளிச்சம் மற்றும் குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பேருந்துகள் வருகை கால அட்டவணை குறித்தும், குடிநீர் வசதி, தாய்மார்கள் பாலூட்டும் அறை மற்றும் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வு அறை வசதிகள் குறித்தும், கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்தும், ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் நடைமேடைகளில் இடையூறாக வைக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் டூவீலர்கள் நிறுத்தும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொது கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் உணவுப் பொருட்கள் தரமானதாக உள்ளதா எனவும், உரிய உணவு பாதுகாப்பு சான்று மற்றும் உணவுப் பொருட்கள் விற்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நகராட்சி சுகதார ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.