நாகர்கோவில் ஏப் 3
கன்னியாகுமரி மாவட்ட நீர்வள ஆதாராத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சிதிட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேற்று செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:-
தமிழ்நாடு முதலமைச்சர் கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டப்பணிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்து, வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு வடிநில கோட்டத்தின் கீழ் உள்ள முட்டம் கால்வாய் 2/750 கி.மீட்டரில் ரூ.17.50 இலட்சம் மதிப்பில் 106 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள கால்வாய் கான்கிரீட் லைனிங் பணியினை பார்வையிட்டதோடு, கரையின் உறுதித்தன்மையினை உறுதிசெய்திட துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கல்குளம் வட்டத்துக்குட்பட்ட தலக்குளம் பகுதியில் வெள்ளப்பெருக்கு காலத்தில் பழுதடைந்த தலக்குளம் வள்ளியாறு பாலத்தின் கீழ்புறத்தில் வள்ளியாற்றின் இடதுகரையில் ரூ.22.57 இலட்சம் மதிப்பில் 20.20 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் பாதுகாப்பு சுவர் அமைக்கபட்டு வரும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, மீண்டும் பேரிடர் காலங்களில் பாதிப்புகள் ஏதும் ஏற்படாத வகையில் பக்கவாட்டு சுவர்கள் பாதுகாப்புடனும், உறுதித்தன்மையுடனும் இருப்பதை துறை சார்ந்த அலுவலர்கள் உறுதி செய்வதோடு, கண்காணித்திட வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை சார்பில் மார்த்தாண்டம் பகுதியில் ஒருமுறை மேம்பாடு செய்தல் திட்டத்தின் கீழ் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் ரூ.14.88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு வைப்புநிதி வேலையாக 12.23 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையை புதுப்பிக்கும் பணி திருநெல்வேலி. தேசிய நெடுஞ்சாலை கோட்டத்தின் மூலம் நடைபெற்று வருகிறது. இப்பணியில் மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியிலிருந்து குலசேகரம் செல்லும் சாலை திருப்பு வரை இருபுறங்களிலும் 230 மீட்டர் நீளத்தில் பேவர் கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ப்பட்டது. மேலும் மழை நீர் ஆனது வடிகாலில் பாய்ந்து செல்ல ஏற்றவாறு சாலையை அமைக்குமாறும். இப்பணிகளை விரைந்து முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நடைபெற்ற ஆய்வில் நீர்வள ஆதாராத்துறை செயற்பொறியாளர் அருள்சன்பிரைட், கோதையாறு வடிநிலக்கோட்ட உதவி செயற்பொறியாளர்கள் வின்ஸ்டன் லாரன்ஸ் (தக்கலை), செல்வ உமா (இரணியல் பாசனப்பிரிவு), கதிரவன் (தக்கலை பாசன சிறப்பு பிரிவு), தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் சேவியர் தெரஸ், உதவி பொறியாளர் வித்யா. (கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில்), துறை அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.