அரியலூர்,ஜூலை:09
அரியலூர் மாவட்டத்தில், வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறையின் சார்பில் வாரணவாசி மற்றும் பார்பனச்சேரி கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் குறித்த விவரங்கள் இ-அடங்கல் செயலியில் பதிவு செய்யும் (டிஜிட்டல் கிராப் சர்வே) பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரியலூர் மாவட்டத்தில், பயிர் விதைக்கப்பட்டுள்ள தரவுகளின் உண்மைத்தன்மையினை மேம்படுத்தும் வகையில் டிஜிட்டல் கிராப் சர்வே பணிகளானது அனைத்து வருவாய் கிராமங்களிலும் நடைபெற்று வருகிறது. அதன்படி பயிர்கள் விதைக்கப்பட்டுள்ள விவரம், பயிர் செய்யப்பட்டுள்ள பகுதிகளின் விவரம், நில உரிமையாளர்கள் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இ-அடங்கல் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேற்றையதினம் நேரில் பார்வையிட்டு, சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் விவரங்கள், நிலம் தொடர்பான தகவல்கள் கிராம கணக்கு அடங்கல்களில் குறிப்பிட்டுள்ளவாறு இ-அடங்கல் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களின் உண்மைத்தன்மை தொடர்பாகவும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், இப்பணிகளை வருவாய்த்துறையினர் மற்றும் வேளாண்மைத் துறையினர் இணைந்து மேற்கொள்ளவும், பணிகளை குறிப்பி;டப்பட்டுள்ள நாட்களுக்குள் விரைந்து முடித்திடவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதேபோன்று சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் குறித்த விவரங்கள் இ-அடங்கல் செயலியில் பதிவு செய்யும் (டிஜிட்டல் கிராப் சர்வே) பணிகள் மேற்கொள்ள வரும் அரசு அலுவலர்களுக்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, மற்றும் மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.