தஞ்சாவூர், அக். 20
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ம் தோற்றுவிக்கப்பட்டு, 43 ஆண்டு கள் நிறைவடைந்த நிலையில் இன்று 14-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் வரவேற்று பேசினார். திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பஞ்சநதம் சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் பல்கலைக்கழக வேந்தரும் தமிழக கவர்னருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கி
100 முனைவர் பட்ட ஆய்வாளர்கள், 76 ஆய்வியல் நிறைஞர்கள், முதுகலையில் 212 மாணவர்கள் , இளங்கல்வியியலில் 190 மாணவர்கள், பல்வேறு பாடப்பிரிவுகளில் 68 பேர் என மொத்தம் 656 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.
சிறந்த மதிப்பெண்கள், புள்ளிகளைப் பெற்ற 8 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்கள் வழங்கினார். இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 25 மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மாற்றுத்திறனாளிகள், திருநங்கை ஒருவரும் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், பேரவை உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
கவர்னர் ஆர்.என்.ரவியின் தஞ்சாவூர் வருகையை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இது தவிர கவர்னர் ஆர்.என்.ரவி திருச்சியிலிருந்து தஞ்சை வரும் வழித்தடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.