நாகர்கோவில், மே 2:
குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: பேச்சுப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக இந்த ஆண்டு ஜூன் தொடக்கத்தில் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. கன்னிப்பு சாகுபடி தொடங்கி கும்பப் பூ நெல் சாகுபடி நிறைவு பெறும் 2026 ம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரை அணைகளில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படும்.
இந்த ஆண்டு கோடை மழை பெய்து வரும் நிலையில் விவசாயிகள் கன்னிபூ சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர். குளத்து பாசன பகுதிகளில் நெல் நாற்றங்கால் அமைக்கும் பணிகளும் பிற பகுதிகளில் நெல் வயல்களை உழுது பண்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது. நெல் நாற்றங்கால் அமைக்கும் பணிகளுக்கு ஏதுவாக விதைகள், உரம் போன்றவை வேளாண்மை துறையால் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
எனவே நெல் நாற்றங்கள் பணிகள் தொடங்காமல் உள்ள விவசாயிகள் அதற்கான பணிகளை உடனே செய்து மே மாத இறுதியில் பணிகளை முடித்து ஜூன் தொடக்கத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறந்தவுடன் வயல்களில் நெல் நாற்று நடவு பணி மேற்கொள்ள முன் ஏற்பாடுகள் செய்ய விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கன்னிப்பூ நெல் அறுவடை முடிந்தவுடன் காலம் தாழ்த்தாமல் கும்ப பூ நெல் சாகுபடி யினை தொடங்க வேண்டும். வருடம் தோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நீர்வளத்துறை மூலம் சாணல் பராமரிப்பு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் 2026ம் ஆண்டு பிப்ரவரி 28 ம் தேதி அணையிலிருந்து தண்ணீர் நிறுத்தப்படும். எனவே விவசாயிகள் இரண்டும் பருவ நெல் அறுவடை பணிகளை 2026ம் ஆண்டு பிப்ரவரி 28 ம் தேதிக்கு முன்பாகவே முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.