ஊத்தங்கரை, ஏப். 17
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கொட்டுக்காரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன்(54 ) விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் மூன்று பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை அன்று மாலை, பசு மாடுகளை தனது விவசாய நிலத்தில் உள்ள கொட்டகையில் கட்டி வைத்து விட்டு வீடு திரும்பி உள்ளார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது ரூ. 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பசுமாடு ஒன்று இறந்து கிடந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயி உடனடியாக கால்நடை மருத்துவர் ரகுபதிக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர் இறப்பிற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருகிறார். பசு மாடு இறந்ததால் விவசாயி மிகவும் வேதனை அடைந்துள்ளார்.


