மயிலாடுதுறை.30
ஒரே அத்தி மரத்தாலான வானமுட்டி பெருமாள் கோயிலில் பிரமோற்சவத்தின் சிகர விழாவான தேர் திருவிழா நடைபெற்றது:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ தயாலெஷ்மி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 14 அடி உயரத்தில் ஒரே அத்தி மரத்தால் மூலவர் சிலை அமைந்துள்ள இந்த ஆலயம் பிப்பல மகரிஷிக்கு இறைவன் விஸ்வரூப தரிசனத்தில் காட்சி கொடுத்த இடமாகும். சனி கவசம் பாடப்பட்ட இந்த ஆலயத்தில் வழிபாடு செய்தால் பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட்ட கோடிஹத்தி தோஷங்கள் நீங்கும் என்பதால் இவ்வூர் கோடிஹத்தி பாப விமோசன தலம் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி கோழிகுத்தி என தற்போது அழைக்கப்படுகிறது. புகழ்பெற்ற இந்த ஆலயத்தின் 18-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி மறுநாள் கோயிலில் உற்சவ கொடி ஏற்றப்பட்டது. பிரம்மோற்சவத்தின் சிகர விழாவான தேர் திருவிழா இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை தொடங்கி புண்யாஹம், சங்கல்பம், ஹோமங்கள் செய்யப்பட்டு மகாபூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து, வானமுட்டி பெருமாள் என்கிற சீனிவாச பெருமாள் திருத்தேரில் எழுந்தருள செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. பின்னர், பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் வீதி உலா நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.