ஈரோடு செப் 8 ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது
ஈரோடு மாவட்டத்தில் 2022- 2023 மற்றும் 2023-24 ம் கல்வியாண்டில் உயர்கல்வி தொடராத 12 ம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வி தொடர்வதற்கு ஏதுவாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்குப் படி 2024 முகாம் ஈரோடு மற்றும் கோபிசெட்டிப்பாளையம் ஆகிய இடங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இம்முகாமின் நோக்கம் உயர்கல்வி தொடராத மாணாக்கர்களை உயர்கல்வியில் சேர்ந்து எதிர்காலத்தில் அவர்கள் பயின்ற துறையில் சிறந்த வல்லுநராக உருவாக்குவதே ஆகும். மேலும் உயர்கல்வியில் சேராத மாணவர்களை மேற்படிப்பில் சேர்வதற்கு பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து, அனைத்து அரசு துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட உள்ளது.
மேலும், ஈரோடு வருவாய் கோட்டத்தில் உயர்வுக்குப் படி 2024 முகாம்கள் வருகின்ற 11 மற்றும் 19 ஆகிய தேதிகளிலும், கோபிசெட்டிப்பாளையம் வருவாய் கோட்டத்தில் வருகிற 12 மற்றும் 23-ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது. மேலும் உயர்க்கல்வி தொடராத மாணவ, மாணவியர்களை கண்டறிந்து தொலைபேசி வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ அணுகி உயர்வுக்குப்படி முகாமில் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு வருவாய் கோட்டத்தில் உயர்வுக்குப் படி முகாம் வருகின்ற 11 ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. உயர்வுக்குப் படி நிகழ்ச்சியுடன் இணைத்து கல்வி கடன் வழங்கும் லோன் மேளா
முகாமும் 11 ந் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.