மார்த்தாண்டம், மே – 18
மார்த்தாண்டம் அருகே உள்ள பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் ஜான்ரோஸ் (59). கொத்தனார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு மற்றொரு நபரின் பாஸ்போர்ட்டை வைத்து ஆள்மாறட்டும் செய்து சவுதி அரேபியா நாட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு அவர் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார்.
இதற்கிடையே ஜான் ரோஸ் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்றது குறித்து அப்போது மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றம் மூலம் விமான நிலையத்திற்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று ஜான்ரோஸ் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்துள்ளார். இதை அடுத்து லுக் அவுட் நோட்டீஸ் மூலம் திருவனந்தபுரம் விமான நிலைய அதிகாரிகள் ஜான் ரோசை அடையாளம் கண்டு பிடித்தனர். மேலும் இது குறித்து மார்த்தாண்டம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் இன்று திருவனந்தபுரம் விமான நிலையம் சென்று ஜான் ரோசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.