நாகர்கோவில் ஆக 18
மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பாஜக சிறுபான்மை பிரிவு மாநில பொதுச் செயலாளர் சதீஸ் ராஜா கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மேற்குவங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. உயிர் காக்கும் மருத்துவர்கள் தெய்வத்திற்கு இணை. அப்படிப்பட்ட பெண் தெய்வத்திடம் அத்துமீறிய செயல் நாடு முழுவதும் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலைப் படிப்பு படித்து வந்த பெண் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் காவல்துறையோடு இணைந்து பணியாற்றும் தன்னார்வலர் சஞ்சய்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் சட்டம், ஒழுங்கு எப்படி உள்ளது என்பதையும் இந்தத் துயர சம்பவம் இதன்மூலம் கண்முன்பு நிறுத்துகிறது. இதில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பலகட்டப் போராட்டங்களுக்குப் பின்பே மெத்தனமாக இருந்த மேற்கு வங்க அரசு, விழித்துக்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளது.
சதிகாரர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேநேரத்தில் மருத்துவர்களுக்கு அரணாக எப்போதும் பிரதமர் நரேந்திர மோடிஜியின் அரசு இருக்கும் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
அந்தவகையில் சுகாதாரத்துறை இப்போதுகூட, பணியில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்கள் தாக்குதலுக்கு உள்ளானாலோ, அல்லது வன்முறைக்கு உள்ளானாலோ, அடுத்த ஆறு மணி நேரத்திற்குள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். காவல் நிலையங்களும் துரிதமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விசாரணையைத் தொடங்க வேண்டும். தவறினால் இதற்கு சம்பந்தப்பட்ட அமைப்புகளின் தலைமையே பொறுப்பு எனவும் உத்தரவிட்டுள்ளது. மாநில அரசுகள் இதைத் தீவிரமாக அமல்படுத்தினாலே மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
மத்திய அரசானது மருத்துவர்கள் நலனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை பாஜக ஆளும் மாநிலங்கள் கொடுப்பதுபோல், பிற மாநிலங்களும் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். எதிர்காலத்தில் இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலெட்சுமி ரெட்டியைப் போல் பெரிய மருத்துவராக வந்திருக்க வேண்டிய பயிற்சி மருத்துவர் உயிர் பறிபோன சம்பவத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.