திருப்பூர் ஜூலை: 16
கணியாம்பூண்டி பகுதியில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மருத்துவர் முருகானந்தம் கலை அரங்க திறப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் மெம்பர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் , இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் அசோகன் , இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் அபுல் ஹாசன் , உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். கலை அரங்கம் திறப்புக்கு பின் இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவர் அபுல் ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை சார்பில் கடந்த 6ஆம் தேதி ஆருயிர் என்னும் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் 42 ஆயிரம் மருத்துவர்கள் மூலம் பொதுமக்களுக்கு அடிப்படை உயிர்காக்கும் பயிற்சிகளை வழங்க இருக்கிறோம். ஒன்றிய அரசு சமீபத்தில் அமல்படுத்திய பாரதிய நியாய சன்ஹிதா 2023 மருத்துவர்களை அச்சுறுத்தி வருகிறது. புதிய சட்டத்தில் உள்ள 106 வது பிரிவின்படி மருத்துவமனையில் நோயாளி உயிரிழந்தால் மருத்துவருக்கு சிறை தண்டனை வழங்கக்கூடிய வகையில் உள்ளது. இது மருத்துவர்களின் மருத்துவ சேவையை பாதிக்கும் வகையில் உள்ளது. இதனை திரும்ப பெற வேண்டுமென ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறோம்.
தொடர்ந்து பேசிய இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் அசோகன் , பாரதிய நியாய சன்ஹிதா 2023 சட்டம் நாடாளுமன்றத்தில் நிலை குழுவில் விவாதத்திற்கு கொண்டுவரப்பட்ட போது இந்திய மருத்துவ சங்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இருப்பினும் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது மருத்துவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. TPR IMA இதனைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை மாத கடைசியில் இயக்கம் நடத்த உள்ளோம். இந்தியாவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து இச்சட்டத்தின் பாதிப்புகளை தெரிவித்து திரும்ப பெற வலியுறுத்த உள்ளோம் என தெரிவித்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டு கலையரங்க திறப்பிற்கு மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார்.