தென் தாமரைகுளம்,டிச.15-
அகஸ்தீஸ்வரத்தில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோவில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் எனவும் கூறப்படுகிறது .
இக்கோயில் தற்போது 91 அடி உயர கோபுரத்துடன் பிரம்மாண்டமான முறையில் புதிதாக கட்டப்பட்டுள்ளது.இதன் கும்பாபிஷேக விழா பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி நடக்கிறது .
கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படும் மூன்று முகம் கொண்ட முத்தாரம்மன், உச்சினிமாகாளி அம்மன், சந்தனமாரியம்மன், மஞ்சள் மாரியம்மன், வெள்ளை மாரியம்மன், கால பைரவர், பைரவி, கருங்கிடாய்காரசாமி, செங்கிடாய்காரசாமி போன்ற சாமி கற்சிலைகள் மயிலாடி கல் சிற்ப கூடத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மேளதாளத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.
ஊர்வலத்தில் கோயில் அறங்காவலர்கள் மணி, கருணாகரன், ராஜசுந்தர பாண்டியன், ஸ்ரீ னிவாசன், கோகுலகிருஷ்ணன், பொருளாளர் சுயம்புலிங்கம், கணக்கர் ராஜசேகர் உட்பட ஊர் மக்கள் திரளாக பங்கேற்றனர்.