இராமநாதபுரம், ஆக. 30 –
ராமநாதபுரம், சாயல்குடி, தேவிபட்டினத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஊரணி மற்றும் கடலில் கரைக்கப்பட்டது. ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான பட்டணம்காத்தான், சக்கரக்கோட்டை, அச்சுந்தன்வயல் ஊராட்சிகளில் 45 விநாயகர் சிலைகள் சதுர்த்தி அன்று இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. கடந்த 3 நாட்களாக விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மேலும் ஒவ்வொரு விநாயகர் சிலைக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்த 45 விநாயகர் சிலைகளும் இன்று பகல் 1 மணி முதல் மாலை 6.30 மணி வரை வாகனங்கள் மூலம் ராமநாதபுரம் நகர் பகுதியான வழிவிடு முருகன் ஆலயம் முன்பு எடுத்து வரப்பட்டன. இதனையடுத்து இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், மாவட்ட பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, ஆர்.எஸ்.எஸ் தென்மாநில தலைவர் ஆடலரசன், பாஜக மாவட்ட தலைவர் முரளிதரன், முன்னாள் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் உள்ளிட்டோர் பேசினர்.
இரவு 7.30 மணிக்கு மேல் வழிவிடு முருகன் ஆலயத்திலிருந்து விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. அங்கிருந்து வண்டிக்காரத்தெரு, அரண்மனை, சன்னதி தெரு, அக்ரஹாரம் சாலை வழியாக 3 கி.மீ தொலைவிலுள்ள நகராட்சி பகுதியான நொச்சியூரணிக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வழி நெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் சிலைகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர். அனைத்து சிலைகளும் நொச்சியூரணியில் கரைக்கப்பட்டது.
கடலாடி, சாயல்குடியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் சாயல்குடி அருகே மாரியூர் கடற்கரையிலும், தேவிபட்டினத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் தேவிபட்டினம் கடற்கரையிலும் விசர்ஜனம் செய்யப்பட்டன. ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



