சோழவந்தான், ஜூலை 19 –
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேட்டை கிராமம் 1-வது வார்டு பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி அருகில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் சுகாதார கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த பகுதியில் சோழவந்தான் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியும் அருகில் இருப்பதால் கழிவுநீரில் இருந்து கிருமிகள் குடிநீரில் கலப்பதால் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், கழிவுநீர் தேங்கும் இடத்திற்கு அருகில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வரும் நிலையில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கும் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து வார்டு பொதுமக்கள், மாணவர்களின் பெற்றோர்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். ஆகையால், பல நாட்களாக தேங்கியுள்ள கழிவு நீரை அப்புறப்படுத்த வேண்டும். அருகில் படிக்கும் பள்ளி குழந்தைகளின் உடல் நலனை பாதுகாக்க வேண்டும். பல ஆயிரம் பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சுத்தப்படுத்த வேண்டும் அருகில் கழிவு நீர் தேங்காதவாறு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.