குலசேகரம், ஜூன் 21 –
பேச்சிப்பாறை, கேம்ப் ரோடு பகுதியில் பல வருடங்களாக கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த நிறுவனத்தின் முந்திரி ஆலை செயல்பட்டது. நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்த நிறுவனம் சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டது. இதில் 60 தொழிலாளர்களுக்கு பணிக்கொடைக்கு தகுதியானவர்களாக இருந்தும் சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்கவில்லை. இந்த நிலையில் ஆலையில் உள்ள பொருட்களை நிர்வாகம் எடுத்துச் சென்ற போது தொழிலாளர்கள் தடுத்த போது ஜூன் 1ம் தேதிக்குள் பணம் தருவதாக உறுதியளித்தனர். 18.06.2025 மதியம் வரை நிர்வாகத்தினர் பணம் கொடுக்காததால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். பேச்சிப்பாறை போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி பின்னர் மாலை 4 மணி அளவில் ஆலை நிர்வாக பிரதிநிதி வந்து பேச்சுவார்த்தை நடத்தி, வரும் 30ம் தேதி பணிக்கொடை வழங்குவதாக உறுதி அளித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.