கிருஷ்ணகிரி, ஜூன் 16 –
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் தான் தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது என பா.ஜக., தேசிய செயற்குழு உறுப்பினர் நரேந்திரன் கூறினார். பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் குறித்து பா.ஜக., சார்பில் ஜூன் 25 வரை தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட உள்ளது. இது குறித்த ஆலோசனைக்கூட்டம் கிருஷ்ணகிரி பா.ஜக., அலுவலகத்தில் நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு தலைமை வகித்தார். பா.ஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நரேந்திரன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து நிருபர்களிடம் கூறியதாவது:
மோடி பிரதமராக பதவியேற்ற பின் தற்போது இந்தியா பொருளாதாரத்தில் 4வது நாடாக உயர்ந்துள்ளது. 2047ல் முதலிடம் பிடிக்கும். டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் உலகின் முன்னணி நாடாக மாறி உள்ளோம். நம் நாட்டில் தயார் செய்யப்பட்டும் பொருட்கள் அனைத்து நாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தரமான சாலைகள், அனைவருக்கும் வீடு, காஸ் உள்ளிட்ட திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள், பெண்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு, 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கி உள்ளது; மத்திய அரசின் திட்டங்களால் தான் தமிழகம் வளர்ந்திருக்கிறது. ஜல்ஜீவன் திட்டத்தில் நாடு முழுவதும் 33 கோடி இணைப்புகளும், தமிழகத்திற்கு மட்டும் 13 கோடி இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொருத்தவரை டாடா எலக்ரானிக்ஸ் நிறுவனம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. ஓலா நிறுவனம் உள்ளிட்டவை மத்திய அரசு இல்லாமல் வந்திருக்குமா?
பல்வேறு கட்சிகள் தற்போது அவர்கள் நிலைப்பாட்டை கூறி வருகின்றனர். வரும் செப்டம்பருக்குப் பிறகுதான் இறுதியான கூட்டணி கட்சிகள் நிலைப்பாடு தெரியும். வரும் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். முதல்வர் யார் என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பது மட்டும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார். கிருஷ்ணகிரி பா.ஜ.க. மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன், பொதுச் செயலாளர் முருகேசன், பொருளாளர் ராணா, முன்னாள் மாவட்டத் தலைவர் சிவப்பிரகாசம், பொறுப்பாளர்கள் தர்மன், கார்த்திகேயன், ராமன், மகாராஜன், சுந்தரமூர்த்தி, மண்டலத் தலைவர்கள் வேணு, செல்வம், விமலா, சாமிநாதன், பாலாஜி, சுப்பிரமணி, நிர்வாகிகள் சரவணன், சிவகுமார், சசிகுமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.