மார்த்தாண்டம், ஜூன். 7 –
மார்த்தாண்டம் அருகே நட்டாலத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சமீபத்தில் கொள்ளை நடந்தது. இதேபோன்று தக்கலை, குன்னம்பாறை உட்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களைக் குறி வைத்து அடிக்கடி கொள்ளை சம்பவம் நடைபெற்று வந்தது. கொள்ளையர்களைப் பிடிக்க போலீசார் சப் இன்ஸ்பெக்டர் ஜாண் போஸ்கோ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அந்தந்தப் பகுதி சிசிடிவி காமிராக்களை ஆய்வு செய்து, தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தனிப்பட்ட போலீசார் நேற்று ராஜாவூர் பகுதியில் வைத்து பைக்கில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் போலீசைக் கண்டதும் தப்பி ஓட முயன்றார். போலீசார் அந்த நபரை துரத்தி, மடக்கிப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் மேலகிருஷ்ணன்புதூரைச் சேர்ந்த அன்பரசு (31) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் வைத்திருந்த பைக்கை சோதனையிட்ட போது அதில் குத்துவிளக்கு, சூலாயுதம், தங்கப் பொட்டு உள்ளிட்ட பல பொருட்கள் இருந்தது. மேலும் அவரை கைது செய்து மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து விசாரணை நடத்திய போது அவர் நட்டாலம் சிவன் கோவில் உட்பட மாவட்டத்தில் 14க்கும் மேற்பட்ட கோவில்களில் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. மேலும் அவரிடமிருந்த ரூ. 9 ஆயிரம் மதிப்பிலான சூலாயுதம், 5 தங்கப் பொட்டுகள், குத்து விளக்கு, வெள்ளிக் கொலுசு, உண்டியல் காணிக்கைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர் மீது மார்த்தாண்டம், தக்கலை, நித்திரவிளை , அருமனை போன்ற காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. இதை அடுத்து அவரை கைது செய்து நேற்று இரவில் குழித்துறை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.