நாகர்கோவில், மே 27:
குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடித்து வரும் நிலையில் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 40 அடியாக உயர்ந்துள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. சூறைக்காற்றுடன் பெய்த மழையின் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள், மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. மாவட்டத்தில் இதுவரை 22 வீடுகள், 170 மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. அதனை சீர் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து பெய்து வருகின்ற மழையின் காரணமாக மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் தணிந்துள்ளது. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பெருஞாணி அணை நீர்மட்டம் 40.05 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 416 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 22 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 36.94 அடி ஆகும். அணைக்கு 821 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்-1 ல் 4.66 அடியாக நீர்மட்டம் உள்ளது. அனைத்து 46 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்- 2ல் 4.75 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 78 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. பொய்கையில் 14.8 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 26 .43 அடியும், முக்கடலில் மைனஸ் 1 அடியும் நீர் மட்டும் உள்ளது.
நேற்று காலை வரை அதிகபட்சமாக பால மோரில் 55.4 மி. மீ. மழை பெய்திருந்தது. குமரி மாவட்டத்தில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடல் பகுதியில் 3.3 முதல் 3.6 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு உள்ளது. என்றும் இதே நிலை காணப்படும். எனவே சிறிய படகுகள், வள் லங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். கடல் அரிப்பு காணப்படும் என்பதால் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் இந்திய கடல்சார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி கடல் பகுதிக்கு ‘ரெட் அலர்ட்’ பிறப்பிக்கப்பட்டுள்ளது.