தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.8,500/- வீதம் மொத்தம் ரூ.85,000/- மதிப்பிலான செயற்கை கால்களையும், தாட்கோ மூலம் வீரகேரளம்புதூர் வட்டம் வீராணம் கிராமத்தில் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தின் சாவியினை ரோஜா மலர் மகளிர் சுயஉதவிக்குழுவினரிடமும், தூய்மைப்பணியாளர் நலவாரியத்தின் மூலம் 02 பயனாளிகளுக்கு தலா ரூ.5000 வீதம் மொத்தம் ரூ.10,000/- க்கான திருமண நிதிஉதவிக்கான காசோலைகளையும், 02 பயனாளிகளுக்கு (10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த தூய்மைப்பணியாளர் நல வாரிய உறுப்பினரின் மகள்களுக்கு) ரூ.1500/- மற்றும் ரூ.1000/- த்திற்கான காசோலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் வழங்கினார்.
மேலும் இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 401 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்புலெட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக்குமார், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) நம்பிராயர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



