கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் பலி
நாகர்கோவில், மே 26: நாகர்கோவிலில் நள்ளிரவில் பைக் மீது கார் மோதி நடந்த விபத்தில் கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
நாகர்கோவிலை அடுத்த இறச்சகுளம் பாரதி தெருவை சேர்ந்தவர் லாரன்ஸ். இவரது மகன் சதீஷ். (24) நாகர்கோவிலில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தாராம். இறச்சகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் சங்கர் என்ற அச்சு (20). நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம்., படித்து வந்தாராம்.
நண்பர்களான சதீஷ், சங்கர் இருவரும் நேற்று நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள டீ கடைக்கு, டீ குடிக்க வந்தனர். பின்னர் இருவரும் டீ குடித்துவிட்டு மீண்டும் பைக்கில் இறச்சகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். பைக்கை சதீஷ் ஓட்டியதாக கூறப்படுகிறது.
நாகர்கோவில் புத்தேரி ரோட்டில் உள்ள ஆவின் பாலகம் அருகே இரண்டு பேரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வேகமாக வந்த கேரள பதிவு எண் கொண்ட கார், பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பைக்கில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் பைக்கும் சுக்கு நூறாக நொறுங்கியது. காரின் முன் பகுதியும் சேதம் அடைந்தது. விபத்து நடந்த சிறிது நேரத்தில் சதீஷ், சங்கர் இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்தனர். அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் விபத்து குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ரோந்து போலீசார் மற்றும் வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இறந்து போன இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து பற்றி அறிந்ததும் இறந்து போனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் திரண்டனர். இறந்து போனவர்களின் உடல்களை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். விபத்து நடந்த பகுதி வடசேரி காவல் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் இது குறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சதீஷ், சங்கர் 2 பேரும் இறந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.