அலங்காநல்லூர், மே.26.
மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியானது காலை 7.25 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, சோழவந்தான் எம்.எல்.ஏ வெங்கடேசன் ஆகியோர் பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சண்முக ராஜேஸ்வரன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். முன்னதாக ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், அரசு அலுவலர்கள் பொதுமக்கள் ஆகியோர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். வருவாய் துறையினர், மருத்துவ துறையினர், மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் 850 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். களத்தில் நின்று விளையாடும் காளையின் உரிமையாளருக்கும், காளைகளை அடக்கும் வீரர்களுக்கும் சைக்கிள், மிக்ஸி, அண்டா, டைனிங் டேபிள், உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இப்போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்து அனுப்புகின்றனர். இதற்காக 25 பேர் கொண்ட கால்நடை மருத்துவ குழுவினரும், கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ்ம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்கள் சுகாதாரத்துறை மருத்துவர்கள் பரிசோதித்து தகுதியான வீரர்கள் 50 பேர் வீதம் ஒவ்வொரு சுற்றாக பங்கேற்றனர். முதலுதவி சிகிச்சைக்காக 40 பேர் கொண்ட மருத்துவ குழுவினரும் ஆம்புலன்ஸ் வசதியும் தயாராக உள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடு
இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போட்டிகள் பாதுகாப்பாக நடைபெற்று வருகிறது. கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருணாகரன் தலைமையில் 230 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுனர்.