மார்த்தாண்டம், மே. 25-
தூத்தூரை சார்ந்த அமலதாசன் மகன் ஏசுதாசன் என்பவருக்கு சொந்தமான றாக்கிங் ஸ்டார்ஸ் என்ற விசைப்படகில் ஏசுதாசன் உட்பட தூத்தூரை சார்ந்த லிபராத்தூஸ், நசரேத், கிறிஸ்துதாசன், சின்னத்துறை மீனவ கிராமத்தை டைட்டஸ், மெர்பின், ஆன்டணி மற்றும் பூத்துறையை சார்ந்த தாமஸ், சதாம், முத்தையன் என 10 பேர் கடந்த மாதம் 25-ம் தேதி தேங்காய்பட்டணம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்றுள்ளனர். இதுவரை இவர்கள் கரைதிரும்பவில்லை.
அரசு மக்களுக்கு வானிலை எச்சரிக்கையை அளித்துள்ளது. ஆனால் விசைப்படகில் சென்ற மீனவர்களை இதுவரை குடும்பத்தினரால் தொடர்புகொள்ள முடியவில்லை.
சமீபத்தில் அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது தொடர்பாக வானிலை எச்சரிக்கை அழைப்பும் விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆழ் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் தங்கள் படங்களுடன் பத்திரமாக கரை வந்து சேர வேண்டுமென மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
வானிலை எச்சரிக்கை ஆழ்கடலில் உள்ள விசைப்படகு மீனவர்களுக்கும் தகவல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், படகுகளும் மீனவர்களும் கரை திரும்பும் வகையில் தக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் மீனவர்கள் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் விவரங்களை அனுப்பி வைத்துள்ளனர் .
இதற்கு இடையில் சின்னத்துறையை சேர்ந்த மீனவர் ஆண்டனி என்பவரின் தந்தை லாசர் என்பவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். ஆண்டனி ஒரே மகன் என்பதால் தந்தையின் இறுதிச் சடங்குகளை இவர்தான் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த சூழலில் ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற ஆண்டனியை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் மீனவரின் குடும்பத்தினரை மேலும் கவலை கொள்ள செய்துள்ளது