தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்
நெய்தல் மக்கள் இயக்கம் கோரிக்கை…
தேர்தல் காலங்களில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்கள் தேர்தல் அறிக்கையில் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்போம் என்று வாக்குறுதி அளிக்கின்றனர். தேர்தல் முடிந்ததும் அடுத்த தேர்தல்வரை அந்த வாக்குறுதியை கிடப்பில் போட்டுவிடுகின்றனர். தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததுபோன்று மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நெய்தல் மக்கள் இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது.
நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின் இது சம்பந்தமாக கூறியதாவது…
ஒரு சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அடிப்படை விதிகளை, தேசிய பட்டியலின மற்றும் பழங்குடியினர் ஆணையம் 1999-ம் ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தது. அதன்படி ஒரு சமூகத்தைப் பட்டியலினமாக அறிவிக்க அந்த சமூகத்தில் பழமையான பண்புகள் இருப்பதற்கான அறிகுறிகள், தனித்துவமான பண்பாடு, பூகம்ப ரீதியில் தனிமைப்படுத்தப்பட்ட நிலை, பிற சமூகங்களோடு தொடர்பு வைத்துக் கொள்வதில் உள்ள கூச்சம் அல்லது தயக்கம், சமூகத்தில் பின்தங்கிய நிலை போன்ற காரணிகள் இருக்கவேண்டும் என்று சொல்கிறது. இவை அனைத்தும், கடலையும் கடல் வளங்களையும் நம்பி வாழும் பூர்வீகக் குடிமக்களான மீனவர்களிடம் உள்ளது. எனவே, மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக நெய்தல் மக்கள் இயக்கம் கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கிறது. எங்கள் கோரிக்கையை ஏற்று காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக என்று அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் இணைத்து வாக்கு கேட்கின்றனர்.
மீனவர்களின் ஓட்டைப்பெறுவதற்காக ஒவ்வொரு தேர்தலின்போது இந்த கோரிக்கையை முதலில் வைக்கின்றனர். தேர்தல் முடிந்ததும் மத்தியில் ஆளும் கட்சி இதை கண்டுகொள்வதே இல்லை. மாநிலத்தில் ஆளும் கட்சிகளும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்புவதோடு அமைதியாகிவிடுகின்றன.
இனி வரும் காலங்களிலும் இந்த கோரிக்கையை நிறைவேற்றாமல் காலம் கடத்திவிடலாம் என்று நினைத்தால் அதற்கு மீனவர்களின் எதிர்வினையாற்றுவார்கள்.
எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய மாநில அரசுகள் விரைந்து செயல்படவேண்டும் என்று நெய்தல் மக்கள் இயக்கம் கோரிக்கை வைக்கிறது என்று குறும்பனை பெர்லின் கூறினார்.
மீனவர்களின் நீண்டகால கோரிக்கைக்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று மீனவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.



