தூத்துக்குடி மே. 12
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் மற்றும் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி போர் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய வளாகத்தில் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி போர் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் நேற்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது. மேற்படி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய வளாகத்தில் எதிர்பாராத விதமாக ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட துறைகள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போர் பாதுகாப்பு ஒத்திகைப்பயிற்சி நடைபெற்றது.
இதில், துறைமுகத்தில் உள்ள கப்பலில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்படும் பட்சத்தில் முதலில் அபாய சங்கு ஒலித்து, போர்க்கால பாதுகாப்பு வழிமுறைகளில் முதற்கட்டமாக அவசரகால அறிவிப்பு வெளியிடப்பட்டதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பணியிருந்த தொழிலாளர்கள் அங்கிருந்த கூடுகை இடத்திற்கு சென்றவுடன் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மற்றும் துறைமுக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்து, கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது, தொடர்ந்து, விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மீட்டு, துறைமுக ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவத்துறை ஆம்புலன்ஸ் மூலமாக தூத்துக்குடி துறைமுக மருத்துவமனைக்கு முதலுதவிக்காகவும், மேல்சிகிச்சைக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்வது, மேலும், கூடுகை இடத்தில் இருக்கும் துறைமுக தொழிலாளர்களை அங்கிருந்து பதற்றமின்றி பாரத சாரணர் மற்றும் சாரணியர் இயக்கம், மாணவர் படை, சேவை திட்ட தன்னார்வலர்கள் மூலமாக பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வது,
பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை வீர்ர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு, வேறு எவரேனும் பாதிக்கப்படவில்லை என உறுதி அளிப்பது, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, காவல்துறை மூலமாக பாதுகாப்பு வழங்கப்படுவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பின்னர், பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது உறுதி செய்யப்பட்டவுடன், மாவட்ட ஆட்சியரால் உரிய அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இதேபோன்று, தூத்துக்குடி அனல் மின் நிலைய வளாகத்தில் எதிர்பாராத விதமாக ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட துறைகள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போர் பாதுகாப்பு ஒத்திகைப்பயிற்சி மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட அவசர கால செயல்பாட்டு மையம் இந்த ஒத்திகை பயிற்சியினை ஒருங்கிணைத்து, காவல்துறை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, பாரத சாரணர் மற்றும் சாரணியர் இயக்கம், மாணவர் இயக்கம், சேவை திட்ட தன்னார்வலர்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் பங்கேற்றனர். ஒத்திகையின் இறுதியில், வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் மற்றும் தூத்துக்குடி அனல் மின் நிலையம் தேவையான அனைத்து வசதிகளுடன் பாதுகாப்பாக உள்ளது என உறுதி செய்யப்படுகிறது.
இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா. ஐஸ்வர்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, தூத்துக்குடி அனல் மின் நிலைய தலைமைப் பொறியாளர் ஸ்ரீதர், வ.உ.சி துறைமுக ஹார்பர் மாஸ்டர் கேப்டன் கிங்ஸ்டன், தூத்துக்குடி வட்டாட்சியர் முரளிதரன் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மருத்துவத்துறை அலுவலர்கள், துறைமுகம் மக்கள் தொடர்பு அலுவலர் மாவட்ட ஆட்சியர் செய்தி மக்கள் தொடர்புத் உதவி அலுவலர் முத்து குமார், மாநகராட்சி நேர் முக உதவியாளர் துரை மணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.