ஒன்றிய, மாநில அரசின் உதவித்தொகையுடன் படிக்கலாம் நாகர்கோவில், மே 13:
நாகர்கோவில் கோணத்தில் அமைந்துள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் ஆல்பிரட் சேவியர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோணத்தில் அமைந்துள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் 2025 – 2026ம் கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு டிப்ளமோ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கடந்த 7ம் தேதி முதல் தொடங்கப்பட்டு உள்ளது. முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் 12ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாணவர்கள் http:// www.tnpoly.in வழியாகவோ அல்லது கோணம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி வழியாக நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ. 150 ஆகும். இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்கிறவர்கள் விண்ணப்ப கட்டணத்தை டெபிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது ஜி பே வழியாக செலுத்தலாம் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் 23.5.2025 ஆகும். மாணவர்களுக்கு கல்வி கட்டணம் ரூபாய் 2,287 ஆகும். தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் தகுதி உள்ள மாணவர்களுக்கு பெற்று தரப்படும். அனைத்து தகுதியுள்ள மாணவர், மாணவிகளுக்கும் தமிழக அரசின் புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் ரூபாய் 1000 மாதந்தோறும் பெற்று தரப்படும். ஒன்றிய அரசால் வழங்கப்படும் தகுதியுள்ள மாணவிகளுக்கு பிரகதி உதவி தொகை வருடத்திற்கு ரூபாய் 50 ஆயிரம் மற்றும் தகுதி உள்ள மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு சாக்சம் உதவித்தொகை வருடத்திற்கு ரூபாய் 50 ஆயிரம் பெற்று வழங்கப்படும். குறைந்த கல்வி கட்டணத்தில் ஒன்றிய, மாநில அரசுகளின் கல்வி உதவித் தொகையுடன் டிப்ளமோ படிப்பதற்கான வாய்ப்பை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளவும். இவ்வாறு கூறியுள்ளார்.



